ஜப்பானில் 250 ஆண்டுகால பழமையான கோவில் தீயில் தீப்பற்றி எரிந்து நாசமானதால், மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.ஜப்பானின் நகானோ மலைப் பகுதியில் அமைந்துள்ளது டோகுமஞ்சி என்ற புத்த மதக் கோவில்.
இது கடந்த 250 ஆண்டுகளுக்கு முன்பு முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 13ம் நூற்றாண்டில் இருந்து இந்த கோவிலில் மக்கள் ஏராளமானோர் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென கோவிலில் தீப்பற்றியது, மரத்தால் செய்யப்பட்டிருந்ததால் தீ மளமளவென எல்லா இடங்களிலும் பரவியது. இதில் கோவில் முழுவதும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கோவில் தலைவராக இருக்கும் துறவியின் வீட்டில் முதலில் தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த கோவில் முழுவதும் பரவியுள்ளது. இதில் 355 சதுர மீட்டர் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கோவில் முற்றிலும் சேதம் அடைந்தது, இரவில் தீப்பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை என்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த 1847ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அப்போது பல நினைவு சின்னங்கள் அழிந்துவிட்டன.
அந்த பூகம்பத்தில் இருந்து டோகுமஞ்சி கோவில் தப்பியது. ஆனால், தீயில் இப்போது கருகிவிட்டது. நாட்டின் அரிய கோவில் ஒன்றை நாங்கள் இழந்து விட்டோம் என்று சோகமாக தெரிவித்தனர்.

|